திங்கள், 25 மே, 2026

மேகதாது அணை விவகாரம் : தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல் !!!

SHARE

 மேகதாது அணை விவகாரம் : தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல் !!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்றும், மேகதாதுவில் புதிய அணைக்கட்டும் விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

மேலும் மத்திய அரசிடம் அனுமதி கிடைத்த பிறகு திட்டத்திற்கான பூமி பூஜை போடப்படும். மேகதாதுவில் அணைக்கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்ள அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேகதாது அணைப் பிரச்சினை குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்து உள்ளது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிற்கு எதிராக கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் 24.05.2026 (நேற்று) தள்ளுபடி செய்து உள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டு உள்ள நிலையில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அரசை கேட்டுக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணையானது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து 30.11.2018 மற்றும் 7.6.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மேகதாது அணையுடன் தொடர்புடைய இவ்வழக்கில் 13.11.2025 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கவில்லை. இத்திட்டம் தொடக்க நிலையில் தான் உள்ளது. மேலும் உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா, இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்து, இவ்வழக்குகளை முடித்து வைப்பதாக உத்தரவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தற்சமயம் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேற்கண்ட தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு விரிவான சட்ட ஆலோசனைக்குப்பின் உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: