சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் பேசிய உதயநிதி, த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபா மீது புகார் ; நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம் என எச்சரிக்கை - சக்தி சேனா கட்சி அமைப்பு !!!
சனாதன தர்மம் குறித்துப் பொதுவெளியில் அவதூறாகப் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக (TVK) சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சக்தி சேனா கட்சியினர் கோவை மாநகரக் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்து உள்ளனர்.
சக்தி சேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன் தலைமையில் திரண்ட அக்கட்சியின் நிர்வாகிகள், கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பொதுச்செயலாளர் பார்த்திபன், பேசும்போது ;
"எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ முஸ்தபா ஆகியோர் சனாதனம் மற்றும் இந்து மதம் தொடர்பாகப் பொதுவெளியில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வருகின்றனர். இவர்களது இத்தகைய பேச்சுக்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மற்றும் மதத்தின் உணர்வுகளைத் திட்டமிட்டுக் புண்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது" எனச் சாடினார். மேலும், "மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பேசி வரும் இவர்கள் இருவர் மீதும் காவல்துறை உடனடியாக உரிய சட்டப் பூர்வமான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறை மெத்தனப்போக்குக் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சக்தி சேனா கட்சி சார்பில் கோவையில் மிகப்பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என அவர் எச்சரித்து உள்ளார்.

0 கருத்துகள்: