வெள்ளி, 31 ஜூலை, 2026

31 வழக்குகள் கொண்ட ரவுடியின் அடாவடி... வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவு: மீண்டும் கல்லூரி பெண்ணை மிரட்டித் துரத்திய சம்பவம் !!!

SHARE

 31 வழக்குகள் கொண்ட ரவுடியின் அடாவடி... வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவு: மீண்டும் கல்லூரி பெண்ணை மிரட்டித் துரத்திய சம்பவம் !!!

தொண்டாமுத்தூர் பகுதியில் மீண்டும் பரபரப்பு; 2 மாதங்களாக ரவுடியைப் பிடிக்க முடியாமல் திணறும் கோவை மாவட்ட காவல் துறை !!!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்து 2 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி, மீண்டும் அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து மிரட்டிய சம்பவம் கோவையில் கடும் அதிர்ச்சியையும் பொதுமக்கள் இடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

 31 வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடியைப் பிடிக்க முடியாமல் காவல் துறை திணறி வருவது அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் சி.பி.சி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (தாளியூர் பேரூராட்சி ஊழியர்). இவருடைய மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது இவருக்கு சென்னை வீருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

ஒரு கட்டத்தில் கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் இருப்பது மாணவிக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கார்த்திக்குடனான தொடர்பை முற்றிலும் துண்டித்து உள்ளார்.

தன்னைப் புறக்கணித்த ஆத்திரத்தில் இருந்த ரவுடி கார்த்திக், கடந்த மே 25-ஆம் தேதி தனது கூட்டாளிகளுடன் KTM மற்றும் பல்சர் பைக்குகளில் வந்து சுந்தரமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டார். கொடூரக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் குண்டுகளை வீட்டின் மீது சரமாரியாக வீசி எறிந்தனர்.

இதில் வீட்டின் போர்டிகோவில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதுமின்றி உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர்.

போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி 2 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த ரவுடி கார்த்திக், நேற்று மாலை மீண்டும் தனது கொடூர புத்தியைக் காட்டி உள்ளார். கல்லூரி முடிந்து பேருந்தில் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்த மாணவியை, கூட்டாளி ஒருவருடன் ஸ்கூட்டியில் வந்த ரவுடி கார்த்திக் மிரட்டும் நோக்கில் துரத்திச் சென்று உள்ளார்.

பயந்து போன இளம்பெண் அலறியடித்தபடி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தப்பித்தார். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பெற்றோருக்குத் தகவல் தெரிவிப்பதற்குள் ரவுடி கார்த்திக் தப்பிச் சென்று விட்டார். இந்த திடுக்கிடும் காட்சிகள் அங்கு உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

31 வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு ஆபத்தான குற்றவாளியை 2 மாதங்களாகப் பிடிக்கத் தவறியது ஏன் ? எனத் தொண்டாமுத்தூர் பகுதி பொதுமக்கள் காவல் துறை மீது காரசாரமாகக் குற்றம் சாட்டுகின்றனர். 

குற்றவாளி மீண்டும் அதே பகுதிக்கு வந்து பெண்ணைப் பின்தொடரும் அளவுக்குத் தைரியம் வந்து உள்ளது, அப்பகுதி மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: