வியாழன், 23 ஜூலை, 2026

பலியான செவிலியர் கல்லூரி மாணவி ; எல்&டி பைபாஸில் ராங் ரூட்டில் சீறிப்பாய்ந்த டிப்பர் லாரி - கோவையில் சோகம் !!!

SHARE

 பலியான செவிலியர் கல்லூரி மாணவி ; எல்&டி பைபாஸில் ராங் ரூட்டில் சீறிப்பாய்ந்த டிப்பர் லாரி - கோவையில் சோகம் !!!

மதிய உணவு முடித்து திரும்பிய போது நேர்ந்த கோர விபத்து : தப்பிய டிரைவர் பிடிபட்டார் – 2 மாணவிகள் படுகாயத்துடன் சிகிச்சை !!!

 கோவை, மதுக்கரை காவல் எல்லைக்கு உட்பட்ட எல் & டி பைபாஸ் சாலையில், அபிராமி செவிலியர் கல்லூரி அருகே தவறான பாதையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில், இரண்டாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த இரண்டு மாணவிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனுஸ்ரீ (21) என்ற மாணவி, சுந்தராபுரத்தில் உள்ள அபிராமி செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி (நர்சிங்) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இன்று மதியம் சுமார் 1.30 மணி அளவில், மதிய உணவு உண்பதற்காக விடுதிக்குச் சென்று விட்டு, சக மாணவிகளான தேவிகா (21) மற்றும் ஸ்ரீதரணி (21) ஆகியோருடன் கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்.

 அவர்கள் கல்லூரி எதிரே உள்ள எல் & டி பைபாஸ் சாலையைக் கடக்க முயன்ற போது, கொச்சினில் இருந்து சேலம் நோக்கித் தவறான பாதையில் அசாத்திய வேகத்திலும் அலட்சியமாகவும் வந்த டிப்பர் லாரி ஒன்று மாணவிகள் மீது சடாரென மோதியது.

இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே அனுஸ்ரீ இரத்த வெள்ளத்தில் பலியானார். வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்ட தேவிகாவும், லேசான காயம் அடைந்து அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீதரணியும் மீட்கப்பட்டுச் சுந்தராபுரத்தில் உள்ள அபிராமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோட முயன்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பால்ராஜ் (40) என்பவரைக் கீழே விழுந்து காயம் அடைந்த நிலையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மதுக்கரை காவல் துறையினர், லாரியைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: