ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

பொள்ளாச்சி அருகே நடுரோட்டில் நின்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி - போலிசார் தீவிர விசாரணை !!!

SHARE

 பொள்ளாச்சி அருகே நடுரோட்டில் நின்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி - போலிசார் தீவிர விசாரணை !!!

 பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக நின்று கொண்டு இருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (45). இவரது மனைவி பூரணி என்ற உமாமகேஸ்வரி (39), இவர்களது மகள்கள் நர்மதா (20), ஆர்த்தி (19) மற்றும் உறவினரான ராமன் ஆகிய 5 பேரும் இன்று காரில் பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலை வழியே பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

கார், பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி என்ற பகுதி வழியே சென்று கொண்டு இருந்த போது, அங்குச் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் (Medians) வைக்கப்பட்டு உள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக லாரி ஒன்று நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, அதிவேகமாக வந்த கார் நின்று கொண்டு இருந்த லாரியின் பின்புறம் பலமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், காரில் இருந்த கனகராஜ், உமாமகேஸ்வரி, நர்மதா, ஆர்த்தி மற்றும் ராமன் ஆகிய 5 பேரும் உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோமங்கலம் காவல் நிலையப் போலீசார், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கோமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: