நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இருந்த 3 வேன்களில் நேபாளம் சென்ற 37 பேர் நிலைமை என்னவென்று தற்போது தெரியவில்லை என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேபாளத்திற்கு சுற்றுலா சென்று, அங்கு ஏற்பட்டு உள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.
திபெத் பகுதியில் இருந்து போட்டே கோஷி ஆறு, நேபாளத்தில் உள்ள ராசுவா, தாடிங், நுவாகோட் ஆகிய மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. அந்த ஆற்றில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தால் கரையோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பல நீர்மின் உற்பத்தி நிலையங்கள் சேதம் அடைந்து உள்ளன.
இதை அடுத்து, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு உள்ளார். அவருடைய உத்தரவுப்படி, நேபாள ராணுவம், ஆயுத காவல் படை, நேபாள காவல் துறை ஆகியவை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் களமிறங்கி உள்ளன. ராசுவா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 5 மருத்துவர்கள் உள்பட 16 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும் விரைந்து உள்ளனர்.
இந்த திடீர் வெள்ளத்தால் நேபாளத்திற்கு சுற்றுலா வந்த பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு சுற்றுலா வாரியம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "291 வெளிநாட்டினர், 93 நேபாள நாட்டினர் என மொத்தம் 384 பேர் மாயமாகி உள்ளனர்.
வெளிநாடுகளை சேர்ந்தவர்களில், 105 பேர் இந்தியர்கள், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆவர். மற்றவர்கள், அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள்
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் அனைவரும், கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் 'சூப்பர் யாத்திரை ஏஜென்சி' மூலம் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஏஜென்சி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 23 ஆம் தேதி மூன்று வேன்கள் மூலம் அவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். நேபாளம் - சீனா எல்லை அருகே சென்று கொண்டு இருந்த போது வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வேன்களும் சிக்கி உள்ளன.
அதில் ஒரு வேனில் பயணம் செய்த 20 பேர் தப்பித்து கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 பேர் நிலைமை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. 15 பேர், அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர் என்று நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
20 பேர் பத்திரமாக உள்ளனர்
இந்நிலையில், நேபாளத்திற்கு சென்றவர்களில் 20 பேர் பத்திரமாக இருப்பதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும் அங்கு இருந்து தகவல் வந்து இருப்பதாக டிராவல்ஸ் உரிமையாளர் சாதிக் அலி தெரிவித்தார்.
இதேபோல், நேபாளத்திற்கு சென்றவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக வட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்து உள்ளார்.
கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு
இதைத்தொடர்ந்து, நேபாள சுற்றுலா வாரியம், கட்டணமில்லா உதவி எண்களை அறிவித்து உள்ளது. உதவிக்கு 1234 அல்லது ஹாட்லைன் தொலைபேசி எண் 1144 அல்லது சுற்றுலா காவல் துறை எண் 98512 89445 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நல ஆணையரகமும் 24 மணி நேர உதவி எண்களை அறிவித்து உள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
இந்தியா: 1800 309 3793
வெளிநாட்டில் இருந்து தொடர்புகொள்ள:
+91 8069009901 / 08069009901, மிஸ்டு கால் : +91 8069009900 / 08069009900, தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி- 92895 16712 (கட்டுப்பாட்டு அறை) ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.
மத்திய அரசு அளித்து உள்ள உதவி எண்கள்
+977 985 131 6807, +977 970 910 7500
தமிழர்களை மீட்க நடவடிக்கை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
இந்நிலையில் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,
"நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளார்.